திங்கள், 18 செப்டம்பர், 2017

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா. முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.. சொன்னது;

"
என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
                           பார்க்காத பார்வை
                வாகீச கலாநிதி திரு கி.வா. ஜகன்னாதன்


கண்ணிற் சிறந்த உறுப்பில்லை “   என்று பழம் புலவர் சொன்னதற்கு  வியாக்கியானமே வேண்டியதில்லை. உலகம் முழுவதும் கண் உடையவர்களாலே பெரு வளம் பெறுகிறது. நமக்கு அருமையான மனிதர்களைக் கண் என்றும் கண்மணி என்றும் பாராட்டிப் பேசுகிறோம்உயிர் மிகவும் அருமையானது; அதற்கு அடுத்தபடியாக அரிய பொருளாக நிற்பது கண்.
            அவ்வளவு உயர்வாகக் கருதுவதற்குரிய கண்ணைக் கூட மட்டமாக்கி விடும் ஒன்று மனிதனிடம் இருக்கிறது. இந்தக்  கண்ணை அகக் கண்  என்று  கூறுவது  வழக்கம். புறக்கண்ணாலே மாத்திரம் பார்க்கும் பார்வை ,விலங்குகளுக்கும் இருக்கிறது. மனிதன் உயர் திணை ஆயிற்றே! அவன் அகக் கண்ணைக் கொண்டு பார்க்கத் தெரிந்தவன் ஆதலால் அவனுக்கு அந்தப் பெருமை வந்தது. முகத்திலே உள்ள கண்கள் உருவம் உள்ள பொருளைத்தான்  பார்க்கும் . நிறமும் , வடிவும் எப்படி உள்ளன என்று தெரிந்து கொள்ளும். அதற்கு மேலே பார்வை செல்லாது. புற வாயிலிலே நின்றுவிடும் பார்வை முகக் கண்ணால் பார்க்கும் பார்வை. புறத்தைக் கடந்து அகத்துள்ளே சென்று பார்க்கும் பார்வை ஒன்று உண்டு. அதையே அகக் கண் என்றும் அறிவு என்றும் சொல்வார்கள்.
            “ எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
             மெய்ப்பொருள் காண்ப தறிவு

            “  எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
              மெய்ப்பொருள் காண்ப தறிவு    என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

புலன்களால் உலகில் உள்ள பொருள்களின் தன்மையை உணர்கிறோம்.புலனுக்குத் தட்டுப்படும்  அந்தத் தன்மையை மாத்திரம் கொண்டு அதன் இயல்பை மெய்யென்று நினைத்து விடக் கூடாது.
            பாம்பு படம் எடுக்கிறது. அந்தப் படம் கண்ணாடியைப் போல பள பள வென்று அழகாக இருக்கிறது. கண்ணினாலே பார்க்கின்ற பார்வைக்கு அழகாகத் தோன்றுவதனால் அந்தப் படம் நல்லது என்று சொல்லலாமாபுறக் கண்ணாலே கண்ட அளவிலே நின்றுவிட்டால் அழகான கண்ணாடியைச் சட்டென்று கையிலே எடுப்பது போல், அந்தப் பாம்புப் படத்தையும் பற்றத்தான் தோன்றும் . குழந்தை அப்படித்தானே செய்யும்? ஆனால் நாம் ,”ஐயோ பாம்பு !”  என்று அலறுகிறோம். ஏன்? புறக்கண்ணாலே பார்க்கும் பார்வைக்குப் பிறகும் மற்றொரு பார்வை நமக்குப் பயன்படுகிறது . அந்த அழகிய படத்தில் உயிரைக் கொல்லும் நஞ்சும் இருக்கிறது என்பதை அந்தப் பார்வை சொல்கிறது.  “ நாகப் பாம்பு அழகிய படம் உடையதாக இருந்தாலும் , கொல்லும் நஞ்சையுடைய பிராணிஎன்று நம்முடைய அகக் கண்ணாகிய அறிவு விளக்குகிறது. ஆகையால் கண்ணாலே கண்ட பொருள் பள பளப்பாகத் தோன்றினாலும் , அது உயிரைப் போக்கும் தன்மையுடையது என்ற உண்மையை உணரச் செய்வது அறிவு.  “ எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவர் வாக்குக்கு இப்போது ஒருவாறு பொருள் தெரிந்துவிட்டது. கண்ணாலே கண்டதோடு நில்லாமல் கருத்தாலும் காணத் தெரிந்தால் அவன் அறிவாளி என்று சொல்லலாம்  இந்த  அறிவு மிக மிக அணுகிச் சென்றால் அவனைச் சிறந்த அறிவாளி என்று சொல்ல வேண்டும் . இந்தப் பார்வை புறக் கண்ணால் பாராத பார்வை. இதனால் பார்ப்பது மிகவும் இன்பத்தைத் தருவதென்றே திருமூலர் சொல்கிறார். உண்மையை உணர்ந்தவனுக்கு உண்மை இன்பம் பிறக்கும் .
           
                        “ முகத்தில் கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள் !
                          அகத்தில் கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம் “    

சீதாப் பிராட்டியைத் தேடிக்கொண்டு அநுமன் இலங்கைக்குப் போனான் . அந்த ஊரெல்லாம் தேடப் புகுந்தான் .இரவு நேரத்தில்  புகை புகா வாயிலெல்லாம் தேடினான். சீதாதேவியைக் கண்டான் இல்லை. இராவணனுடைய அந்தப்புரத்திலே நுழைந்தான். அங்கே இராவணனிடம் காதல் கொண்டு வாடிய பல மடந்தையரைக் கண்டான். பிறகு மயன் மகளும் , இராவணன் மனைவியுமாகிய மண்டோதரி உறங்கிக் கொண்டிருந்த மாடத்துக்குச் சென்றான்.
அங்கே மண்டோதரியைக் கண்டான். அவளுடைய பேரழகையும் , அமைதியையும் கண்டபோது அவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. “ இவள்தான் சீதையோ?என்று சற்று நேரம் திகைத்துப் போனான் . மணி விளக்கங்களெல்லாம் மழுங்கும்படியாகத் தன் மேனி ஒளி தழைப்புற்று விளங்கத் துயில் புரிகின்ற  மண்டோதரியை அநுமன் கண்டு ,          ” இவள் ஜானகியோ?” என்று ஐயுற்று உயிரிலே அக்னி பற்றினாற் போல் வருத்தத்தை அடைந்தான்  என்று கம்பர் சொல்கிறார்.

                  “ இன்ன தன்மையின் எரிமணி விளக்கங்கள்
                         எழில்கெடப் பொலிகின்ற

               தன்ன  தின்னொளி தழைப்புறத் துயில்வுறு தையலைத் தகைவில்லான்
               அன்ன ளாகிய சானகி இவளென
                         அயிர்த்தகத்  தெழுவெந்தீத்
                துன்னும் ஆருயிர் உடலோடு சுடுவதோர்
                         துயருழந் திவை சொன்னான்.” ------
அநுமன் அதற்கு முன்னாலே சீதையைப் பார்த்ததில்லை.இராமனிடம் விடை பெற்றுக் கொண்டபோது அவன் சீதையின் அங்க அடையாளங்களைக் கேட்டுக் கொண்டு வந்தான். அத்தனை மகளிர் கூட்டத்திலும் மண்டோதரி அழகியாகவும் உயர்வுடைவளாகவும் தோன்றினாள். கண்ணினால் பார்த்த அளவிலே அந்தப் பார்வை சீதையோ என்ற ஐயத்தை உண்டாக்கிவிட்டது. அதனால் அளவற்ற துக்கத்தையும் அடைந்தான்.
           
“ நான் இந்த உலகத்திலே பிறந்த பிறவி வீணாய்விட்டது” என்று மனமுடைந்து அழுங்கினான். “ இவள் சீதையாக இருந்தால் இராமன் புகழ் தொலைந்தது; அவன் பெருமை தொலைந்தது ; நானும் தொலைந்தேன் ; இந்த இலங்கையும் தொலைந்தது; இராட்சசர்களும்  அடியோடு தொலைந்தார்கள். “ என்று நைந்து சாம்பினான் .

அநுமன் முகக் கண் மாத்திரம் கொண்டு பார்க்கிறவனாக இருந்தால் , இந்தத் துயரக் கடலிலே  அமிழ்ந்திருப்பான். ஆனால் அவன் அகக் கண்ணாலே பார்க்கும் பார்வையைப் பெற்றவன்.  நோக்காமல் நோக்குபவன். கண்ணை நம்பி ஆராய்வதோடு நில்லாமல் , கருத்தையும் கலந்து ஆராய்பவன். இதைக் கம்பர் சொல்கிறார்,

                        “கண்டு கண்ணோடு கருத்தோடு கடாவினன்”-----

            கண்ணோடு கடாவியபோது   அவன் ஐயத்திலும் துயரத்திலும் ஆழ்ந்தான் . மேலே கருத்தோடு கடாவினான்.; அப்போதுதான் உண்மை புலனாயிற்று.
           
“ சீதை மனிதத் திருமேனி படைத்தவள். இவள் வேறு இயல்பு கொண்டவள். யக்ஷ சாதியோ, ராட்சச சாதியோ தெரியவில்லை!.  தவிர  இராமபிரான் மேல் உள்ளம்  சென்ற காதலையுடைய பெண்டிருக்கு , மன்மதனாக இருந்தாலும் அவ்வுள்ளம் பிறன்பால் செல்லுமோ?” என்ற பார்க்காத பார்வை உதயமாயிற்று. மேலே இன்னும் சில காரணங்களை ஆராய்ந்து உண்மையை உணர்ந்து கொண்டான் .

அவன் பார்த்த பார்வையைக் காட்டிலும் பாராத பார்வையே உன்மையைத் தெளிவுறுத்தியது.

இப்படி ஒரு பார்வை உண்டு என்பதை இலக்கியப் புலவர்கள் உணர்ந்து பல இடங்களிலே சொல்லியிருக்கிறார்கள். அந்தப்பார்வை கண்ணாலே பார்ப்பது அன்று என்பதையும் குறிப்பாகத் தெரிவித்திருக்கிறார்கள். இலக்கணப் புலவராகிய தொல்காப்பியரும் இந்தப் பார்வையைப் பற்றிச் சொல்கிறார். “ நோக்கல் நோக்கம்” என்று அவர் இதனைக் குறிக்கிறார். “நோக்கு அல்லாத நோக்கம் “ என்று அதை விரிக்க வேண்டும் . “ பார்வை அல்லாத பார்வை “ என்பது பொருள் .

“ நோக்கப் பொருண்மை நோக்கிய  நோக்கமும் , நோக்கல் நோக்கமும் என இரண்டு வகைப்படும் ; நோக்கிய நோக்கம் கண்ணால் நோக்குதல் ; நோக்கல் நோக்கம் மனத்தால் ஒன்றனை நோக்குதல்” என்று சேனாவரையர் இதை விளக்குகிறார்.

‘பார்த்தல் என்ற மாத்திரத்தில் கண்ணாலே பார்ப்பதுதான் ஞாபகத்துக்கு வரும். நோக்குதல் இல்லாத நோக்கம் ஒன்று உண்டு என்பதை இந்தத் தொடர் நினை வுறுத்துகிறது. இலக்கியங்களில் நோக்குதல் என்ற சொல் வரும் இடங்களிலெல்லாம் கண்ணாலே பார்த்தல் என்ற பொருள் கொண்டு , அங்கே கண் எங்கே என்று தேடக் கூடாது. கருத்தினாலே கருதுவதையும் நோக்கு என்று சொல்வதுண்டு. அந்த நோக்கு , நோக்கு அல்லாத நோக்கு; பார்க்காத பார்வை

 “ வான் நோக்கி வாழும் உயிர் எல்லாம்
   கோல் நோக்கி வாழும் குடி “ –

என்ற குறளை , இந்தப் பார்க்காத பார்வைக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிறார்கள் உரைகாரர்கள்.

“ உயிர்களெல்லாம் வானத்தைக் கண்களால் அண்ணாந்து பார்த்துக் கொண்டு வாழும் “ என்று அர்த்தம் செய்யலாமா? “ வானில் உண்டாகும் மழையாகிய பயனைக் கருதி , அது கிடைக்கும் என்று நம்பி உயிர்கள் உலகத்தில் வாழும் “ என்று பொருள்கொள்வதுவே முறை. இங்கே நோக்கும் என்ற சொல் இருந்தாலும் அது கண்ணாலே பார்க்கும் பார்வையைக் குறிப்பது அன்று; நோக்கல் நோக்கமாகிய , பார்க்காத பார்வையையே குறிக்கும் .


  
                        ‘

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

யமன் வாயில் மண் – கி.வா.ஜகந்நாதன்
#42f4df
“எங்கே?”
“கொலைக்களத்திற்கு.”
“ஆ!” அவன் மூர்ச்சையாகி விழுந்துவிட்டான். முகத்தில் நீர் தெளித்து அவனை எழுப்பினார்கள். எதற்காக? அடுத்தபடி அவனைக் கொல்வதற்காகத்தான். அப்பொழுது அங்கே ஏதோ ஆரவாரம் உண்டாயிற்று. ஒரு சிறு கூட்டத்தினர் சந்தோஷ கோஷத் தோடு அந்த வழியே வந்தனர். கோவூர்கிழார் என்ற நல்லிசைப் புலவர் வந்திருக்கிறார். அவரைச் சுற்றி ஜனங்கள் கூடிக்கொண்டு குதுகலித்தார்கள். தமிழுலக முழுவதும் பெரும் புகழ்பெற்ற சிறந்த கவிஞர் அவர். அரசனை நோக்கிச் செல்லும் அப்புலவரைச் சூழ்ந்த கூட்டம் யமனை நோக்கிச் செல்லும் இளந்தத்தனை அணுகியது. அப்பொழுதுதான் அந்த இளம் புலவன் மூர்ச்சை தீர்ந்து கண் விழித்தான். கோவூர் கிழார் போகிறார் என்பதை அந்தக் கூட்டத்தினரின் பேச்சால் உணர்ந்துகொண்டு ஓலமிட்டான்:”புலவர் திலகரே ஒலம்! கோவூர்கிழாரே ஓலம்!’ என்று கதறினான்.
கோவூர்கிழார் காதில் இந்தப் புலம்பல் பட்டது. அவர் நின்றுவிட்டார். விஷயத்தை விசாரித்தார். இளந் தத்தனை அணுகிப்பேசினார். “யாதொரு பாவமும் அறியாதவன் நான். என்னை ஒற்றனென்று கொல்லப்போகிறார்கள்.”
அறிவிற் சிறந்த அப்பெரியார் அவனோடு சில கணம் பேசினார்.’உண்மையில் அவன் புலவன் தான்’ என்பதை உணர்ந்துகொண்டார். இனம் இனத்தை அறிவது இயல்புதானே?’ என்ன காரியம் இது? பெரிய பாதகச் செயலுக்கு இவ்வரசன் உள்ளாகி விட்டானே! இந்த இளம் புலவன் குற்றமின்றியே கொலைப்படுவதா?” என்று நினைத்தபோது அவர் உடல் நடுங்கியது. கொலையாளிகளைப் பார்த்து,” சற்றுப் பொருங்கள். இவரை நான் அறிவேன். இவர் ஒற்றர் அல்ல. மன்னனிடம் இதைப் போய்ச் சொல்லி வருகிறேன்” என்று கூறிவிட்டு விரைவாக அரண்மனையை நோக்கி நடந்தார்.
யமன் வாயை நோக்கிச் சென்ற கவளம் அந்தரத்திலே நின்றது.
“அரசே, அந்தப் புலவர்களின் பெருமையை நான் என்னவென்று சொல்வேன்!” என்று நிதானமாகப் பேச ஆரம்பித்தார் கோவூர்கிழார்.
“அதில் என்ன சந்தேகம்? புலவர்களால்தான் எங்களுடைய புகழ் நிலைநிற்கிறது” என்று ஆமோதித் தான் நெடுங்கிள்ளி.
“அவர்களுடைய முயற்சியைச் சொல்வதா? அடக்கத்தைச் சொல்வதா? திருப்தியைச் சொல்வதா? அவர்களும் ஒரு விதத்தில் அரசர்களாகிய உங்களைப் போன்றவர்களே!”
“கவிஞர்களென்ற பெயரே சொல்லுமே.”
“எங்கெங்கே ஈகையாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போகிறார்கள். பழுத்த மரம் எங்கே உண்டோ அங்கே பறவைகள் போய்ச் சேருகின்றன அல்லவா? கடப்பதற்கரிய வழிகள் நீளமானவை என்று நினைக்கிறார்களா? இல்லை இல்லை. ஒரு வள்ளல் இருக்கிறானென்றால் நெடிய என்னாது சுரம் பல கடக்கிறார்கள். அவனை அடைந்து தமக்குத் தெரிந்த அளவிலே அவனைப் பாடுகிறார்கள்.அவன் எதைக் கொடுக்கிறானோ அதைத் திருப்தியோடு பெற்றுக்கொள்கிறார்கள். பெற்றதைத் தாமே நுகராமல் தம்முடைய சுற்றத்தாரும் நுகரும்படி செய்கிறார்கள். நாளைக்கு வேண்டுமென்று வைத்துக் கொள்வதில்லை. திருப்தியாக உண்ணுகிறார்கள்; எல்லோருக்கும் தாராளமாகக் கொடுக்கிறார்கள். மறுபடியும், வரிசை அறிந்து கொடுக்கும் உபகாரி எங்கே இருக்கிறானென்று தேடிப் புறப்பட்டு வருகிறார்கள். வரிசை அறிவோர் கிடைக்காவிட்டால் வருந்துகிறார்கள். இந்த நல்ல பிராணிகளால் யாருக்காவது தீங்கு உண்டோ? கனவிலே கூட அவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்க மாட்டார்கள்; நினைக்கவும் தெரியாது. பரம சாதுக்கள். நான் சொல்வது உண்மையல்லவா?”
“முக்காலும் உண்மை. புலவர்களால் நன்மை உண்டாகுமேயன்றித் தீமை உண்டாக வழியே இல்லைஅவர்கள் கடிந்து சொன்னாலும் அது நன்மையைத் தான் விளைவிக்கும்.”
“அதைத் தான் நான் வற்புறுத்திச் சொல்கிறேன். இவ்வளவு சாதுவாக இருந்தாலும் அவர்களுடைய பெருமை பெரிது. உங்களைப் போன்ற சிறப்பு அவர்களுக்கும் உண்டு. பகைவர்கள் நாணும்படி தலை நிமிர்ந்து சென்று வெற்றி கொள்ளும் தன்மை அவர்களிடமும் உண்டு. கல்விவீரர்கள் அவர்கள். ஓங்கு புகழ் மண்ணாள் செல்வம் எய்திய நும்மனோரைப் போன்ற தலைமை அவர்களுக்கும் உரியதே.”
“மிகவும் பொருத்தமான வார்த்தைகள்.” கோவூர்கிழார் சிறிது மௌனமாக இருந்தார்.
“பிறர்க்குத் தீதறியாத வாழ்க்கையுடைய அவர்களைக் குற்றவாளிகளாக எண்ணுவது–”
“மடமையிலும் மடமை” என்று வாக்கியத்தை முடித்தான் நெடுங்கிள்ளி.
“அரசே, இன்று இந்த உண்மை இவ்வூரில் பொய்யாகிவிடுமென்று அஞ்சுகிறேன்.”
“ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?” என்று திடுக்குற்றுக் கேட்ட்டான் அரசன்.
“ஒரு பாவமும் அறியாத புலவனாகிய இளந்தத்தனைக் கொலைக்களத்துக்குப் போகும் வழியில் கண்டேன். புலவர் உலகமே தூக்கு மரத்தில் தொங்குவது போல அஞ்சினேன். ஓடி வந்தேன் இங்கே. அவன் யான் அறிந்த புலவன்.”
கோவூர்கிழார் முன்னம் அப்புலவனை அறியாவிட்டாலும் ஒரு கணத்தில் அவனை அறிந்துகொண்டார் என்பதில் பிழை என்ன? ‘அப்படி அல்ல அவர் சொன்னது பொய்’ என்றாலோ, ஒருவன் உயிரைப் பாதுக்காக்கச் சொன்ன அச் சொல்லைக் காட்டிலும் வாய்மை வேறு உண்டோ?
“பொறுத்தருள வேண்டும் நான் செய்தது பிழை….யர் அங்கே! ஓடுங்கள். இளந்தத்தரை விடுவித்து அழைத்து வாருங்கள்…ஆசனம் கொண்டு வாருங்கள்… என்ன பாதகம் செய்தேன்! அபசாரம்! அபசாரம்! …பகைமை இருள் என் கண்ணை மறைத்துவிட்டது.. உங்களால் நான் அறிவு பெற்றேன்.” – அரசன் வார்த்தைகள் அவன் உணர்ச்சியைக் காட்டின. அச்சமும் பச்சாதாபமும் துள்ளின அவன் வாக்கில்.கோவூர்கிழார் முகத்தில் ஒளி புகுந்தது. இளந்தத்தன் உடம்பில் உயிர் புகுந்தது. யமன் வாயில் மண் புகுந்தது. இந்த நிகழ்ச்சியை அறிந்த உலகத்தார் உள்ளத்தில் வியப்புப் புகுந்தது.





  எண்ணத் தெரியுமா? ---கி.வா.ஜ

தமிழ் நாட்டிலே பழகாத அயல்நாட்டார் ஒருவர் தமிழைக் கற்றுக் கொள்கிறார். கூடிய வரையில் சிரத்தையோடு பயின்று வருகிறார். தொல்காப்பியத்தை நன்றாகப் படிக்கிறார்.மற்ற இலக்கியங்களை இன்னும் படிக்கவில்லை.தொல்காப்பியம் மிகவும் பழங்காலத்து இலக்கண நூல் என்றும் இப்பொழுது கிடைக்கும் தமிழ் நூல்களுள் அதுவே காலத்தால் முந்தியதென்றும் தெரிந்துகொண்டு ஆழ்ந்து பயின்று , தொல்காப்பியத்தினால் உணரப்படும் செய்திகளைத் தொகுக்கிறார்.அவருக்கு என்ன என்ன விஷயங்கள் கிடைக்கும்?தமிழர்கள் அந்தக் காலத்திலேயே நன்றாக வாழும் வகைகளை உணர்ந்திருந்தார்கள்   என்ற செய்தி கிடைக்கும் . மலர்களும் , மரங்களும் அவர்கள் வாழ்க்கையில் இன்பத்துக்குக் கருவிகளாயின என்பது தெரியும் . காதலும் , வீரமும்  தமிழர் வாழ்க்கையில் இரண்டு மூச்சு நாடிகள் என்பதை உணர்வார்.
            எழுத்ததிகாரத்தை  வாசித்து முடித்தாலே  பல பல செய்திகள்  தெரிய வரும் . தமிழர்கள் வியாபாரத் துறையிலும் சிறந்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் . அவர்களுக்கு எண்ணத் தெரியுமா? அளக்கத் தெரியுமா? நிறுக்கத்   தெரியுமா? எல்லாம் தெரியும் என்ற செய்தியை தொல்காப்பியத்தின் முதல் அதிகாரமே புலப்படுத்துகிறது.
            ஒன்று முதல் பத்து வரையில்  எண்ணத் தெரியும் .பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று—இப்படி எண்ணிக்கொண்டே போகத் தெரியும் . “இதென்ன? அரிச்சுவடி தெரியும் , எண் சுவடி தெரியும் என்பதையெல்லாம் பிரமாதமாகத் தமிழர்களுடைய கௌரவத்துக்குக் காரணமென்று சொல்வீர்கள் போல் இருக்கிறதே!”  என்று நண்பர்கள் பரிகாசம் செய்ய எண்ணலாம் . பல நூற்றாண்டுகளுக்கு முன்பு,  நாமே நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கிறோம் என்று இறுமாந்து  நின்ற இந்தக் காலத்து மக்களும் கண்டு பொறாமைப்படும்  அமைதியான வாழ்க்கை வாழ்ந்த அவர்கள் , இத்தகைய வரையறைகளைக்  கொண்டிருந்தார்கள்  என்பது ஆச்சரியமல்லவா?மொஹெஞ்சதாரோவில் உடைந்த மரக்கால் ஒன்று கிடைக்கிறதென்றால் , அதை எடுத்துப் படம் பிடித்துச் சரித்திர ஆராய்ச்சி செய்யப் புகுவது எவ்வளவு உபயோகமோ அவ்வளவு உபயோகம் இந்த ஆராய்ச்சியிலும் இருக்கிறது.அது மரக்கால் என்ற பண்டத்தின் ரூபத்தைப் பற்றிய ஆராய்ச்சி; ரூபமாக இருந்தால் என்ன ? நாமமாக  இருந்தால் என்ன? இரண்டும் அத்தகைய பொருள் வழங்கியதைப் புலப்படுத்தும் சாட்சிகளே அல்லவா?
            தொண்ணூறு , நூறு , தொள்ளாயிரம் ஆயிரம் , ஈராயிரம் , நூறாயிரம் வரையில் தமிழர்கள் எண்ணி வந்தார்கள்.தொல்காப்பியத்தில் இந்த எண்களைப் பற்றிச் சொல்ல என்ன காரணம்? ‘பன்னிரண்டு என்ற வார்த்தை எப்படி வந்ததென்பதை  இலக்கண வழியில் தொல்காப்பியர் ஆராய்கிறார்.’பத்தும் , இரண்டும் சேர்ந்து பன்னிரண்டு ஆகின்றன.பத்து இரண்டு என்ற இரண்டு வார்த்தைகள்  புணரும் பொழுது என்ன என்ன மாற்றங்களை அடைகின்றன என்பதை வரையறுக்கிறார். இப்படியே மற்ற எண்கள் , அளவுப்பெயர்கள், நிறைப்பெயர்கள்   ஆகியவற்றின் ஆராய்ச்சி தொல்காப்பியருடைய  புணர்ச்சி இலக்கணத்தில் அகப்படுகிறது.
            நூறாயிரத்திய ‘லக்ஷம்’ என்று இப்போது வழங்குகிறோம் . ‘ல’என்ற எழுத்து பழைய தமிழிலொரு வார்த்தையின் முதல் எழுத்தாக வராது.வட மொழி வார்த்தை தமிழில் வரவேண்டுமானால் அதற்கு முன்னால் ‘இ’ என்ற எழுத்து   , ‘ல’ என்ற  எழுத்துக்குக் கை கொடுக்க வேண்டும் . ‘லங்கை’ என்பது , ‘இலங்கை’ என்றும் , ‘லாபம்’ என்பது ‘இலாபம் ‘ என்றும் வரும் .
தொல்காப்பியத்தில் லக்ஷம் என்ற பெயர் வரவில்லை. ‘நூறாயிரம் ‘என்றே பழந்தமிழர் வழங்கியிருக்க வேண்டும் . கடைச்சங்க நூல்களில் ,’கோடி’ என்ற எண்ணும் வருகின்றது. அதற்கும் மேலே தமிழர் எண்ணத் தெரிந்து கொண்டிருந்தனர்.  கோடிக்கு மேல் மூன்று எண்ணிக்கைகளின் பெயர்களைத் தொல்காப்பியச் சூத்திரம் ஒன்று குறிக்கின்றது.
            ஐஅம் பல் என வரூம் இறுதி
          அப்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும் .
‘ஏழு’ என்ற வார்த்தைக்கு முன் எண்ணிக்கைப் பெயர்கள் வந்தால் இரண்டும் சேர்ந்து எப்படி வழங்கும் என்பதைச் சொல்லும் இடத்தில் இந்தச் சூத்திரம் இருக்கிறது. ‘ஏழ்’ என்பதே  ‘ஏழு’என்ற அர்த்தத்தைத்   தருவது.அதற்கு முன்னால் எண்ணளவைப் பெயராகிய தாமரை , வெள்ளம் , ஆம்பல், என்ற மூன்றும் வந்தால் ,’ஏழ் தாமரை’ , ஏழ் வெள்ளம் , ‘ஏழாம்பல்’ என்று நிற்கும் .இதைச் சூத்திரம் சொல்கிறது.’ஐ,அம்,பல்’ என்று வருகின்ற இறுதியையுடைய ,பண்டங்களின் பெயர்கள் அல்லாத எண்களின் பெயர்களாகிய மூன்றும் வந்தாலும் முன்னே சொன்னபடி நிற்கும்’  என்பது இதன் பொருள்.  கோடிக்கு மேலே உள்ள ஒரு பெரிய அளவுக்கு , ‘தாமரை’ என்றும் ,அதற்கும் மேற்பட்ட ஓர் எண்ணுக்கு ,’வெள்ளம்’ என்றும் , அதைவிடப் பெரிய எண் ஒன்றுக்கு,’ஆம்பல்’என்றும் பெயர் வழங்கின  செய்தி இதனால் தெரிய வருகிறது.
பின்ன எண்ணைத் தொல்காப்பியர் “பால்வரை கிளவி “ என்று சொல்கிறார்.தமிழில் உள்ள எண் சுவடியில் ‘கீழ்வாயிலக்கம் , மேல்வாயிலக்கம் , குழிமாற்று ‘ முதலிய பலவகைக் கணக்கு வகைகள் உண்டு .அவை தொன்று தொட்டுத் தமிழ் நாட்டில் வழங்கி வந்திருக்கின்றன.அதில் உள்ள பெயர்களில் பெரும்பாலான தனித் தமிழ்ப் பெயர்கள் , அவற்றைக் கொண்டே அவை தமிழ் நாட்டின் வாழ்க்கையில் பல காலமாக ஒன்றி வழங்கி வந்தன  என்பதை  உணரலாம் .
            வடமொழியில் ‘சங்கம்’ , ‘பத்மம் ‘ போன்ற பேரெண்கள் வழங்குகின்றன. ‘தாமரை’ என்பது ‘பத்மம்’ என்பதின் மொழிபெயர்ப்பாக இருக்கலாம். ஆனால், வெள்ளம் என்ற சொலும் ஆம்பல் என்ற சொல்லும்  அங்ஙனம் வந்தன  என்று தோன்றவில்லை. ‘ வெள்ளம்’ என்ற எண்ணைத் தமிழ் நூல்களில் பல இடங்களில் காணலாம் . கம்பராமாயணத்தில் சேனைக் கணக்கு  வரும் இடங்களில் “ஆயிர வெள்லம் சேனை” என்பது போல  இந்த வார்த்தை வருவதை உணரலாம்.
            திருமுருகாற்றுப்படையில் “தாமரை பயந்த தாவில்  ஊழி, நான்முக ஒருவன் “ என்று ஒரு பகுதி வருகிறது. ‘தாமரையென்னும் எண்ணையுடைய ஆண்டுகளைத் தன் ஆயுளாகப் பெற்ற பிரமதேவன்’ என்று நச்சினார்க்கினியர் அர்த்தம் செய்கிறார். பிரம தேவன் தாமரையில் வாழ்பவன் .’அலரோன்’, ‘பதுமன்’ , என்ற பெயர்களால் வழங்கப்  பெறுபவனவனுடைய ஆயுளையே ஓர் அளவாக்கித் தாமரையோன் ஆயுளாதலின் ,’தாமரை’ என்று வகுத்தார்களோ என்னவோ!
பால்வரை கிளவியாகிய பின்னம் முதல் ஆம்பலென்னும்  பேரெண்வரையில்  தமிழர்கள் உணர்ந்திருந்தனர். என்பதை எழுத்ததிகாரத்தின் மூலம் முன்னே சொன்ன அயல்நாட்டார் தெரிந்து கொள்வார். நாமும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும் .


வெள்ளி, 15 செப்டம்பர், 2017

பயப்படாதீர்கள் --- கி.வா.ஜ
பழந்தமிழ் நூல்களைப் பற்றித் தொடர்சியாகப்  பிரசங்கங்கள் செய்து வரவேண்டுமென்று மயிலாப்பூர் இந்திய இளைஞர் சங்கத்தினர்  ஒரு முறை கேட்டுக் கொண்டனர்.
எழுத்ததிகாரம் , சொல்லதிகாரம் , பொருளஹ்டிகாரம் என்ற மூன்று அதிகாரங்களிலுள்ள செய்திகளையும் இவ்வாறு பார்த்துத் தொகுத்துப் பேசியபோது , கேட்ட அன்பர்கள் , நான் பேசியதில் விளங்காத கருத்து ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள். அப்பிரசங்கங்களை எழுத்துருவத்தில் அமைக்க வேண்டும் என்றும் சில அன்பர்கள் கூறினார்கள்.
இப்புத்தகத்திலுள்ள செய்திகளிற் பெரும்பாலான தொல்காப்பிய மூலத்தைப் பின் பற்றியே எழுதப் பெற்றன. சில இடங்களில் நச்சினார்க்கினியருடைய உரையைத் தழுவிய செய்திகள் வருகின்றன. ‘யாவரும் தெரிந்து கொள்வதற்கு உரிய செய்திகள் அதில் உள்ளன’ என்று இதைப் படிப்பவர்கள் உணர முடிந்தால் , இந்த முயற்சி வெற்றி பெற்றது என்ற ஆறுதலை அடைவேன்; பார்க்கலாம்
                                                                                                கி.வா.ஜகந்நாதன்.
தமிழின் பழமை----   கி.வா.ஜ
உயிர்த்தொகுதியில் மனிதன் சிறந்தவனாக இருக்கிறான் .பகுத்தறிவு இருப்பதனால் கண்ணால் கண்டும் , காதால் கேட்டும் , பிற பொறிகளால் உணர்ந்தும் தெரிந்து கொண்டவற்றை வேறுப்பிற மொழிகளால் அறிந்து பிரித்து அறிந்தும் , மறவாமல் நினைந்தும்,  தொடர்பு படுத்திச் சிந்தித்து வாழ்கிறான் . இந்த ஆற்றல் மாட்டுக்கு இல்லை; எறுப்புக்கு இல்லை.
            மற்றொரு முக்கியமான வேற்றுமையைப் பிராணிகளிடத்திலே பார்க்கிறோம் . வாயில்லா ஜீவன்களாகிய  விலங்கினங்களுக்குப் பேசத் தெரியாது. மனிதன் பேச்சென்னும் அற்புதமான வரத்தைப் பெற்றிருக்கிறான் . ‘விலங்குகளுக்கும் பாஷை உண்டு. ஒவ்வோர் இனத்துக்கும் ஒரு பாஷை இருக்கிறது.’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதில் உண்மையும் உண்டு. ஆனால் அந்தப் பஷை பச்சைக்குழந்தையின் பாஷை போன்றது. சிலவகை ஒளிகளுக்குள்ளே உணர்ச்சிகளை  வெளியிடும் பாஷை  அது. அழுகை, சிரிப்பு, ஹூம்  என்று சொல்வது –இவ்வாறு உள்ள ஐந்தாறு ஒலிகளே  குழந்தையின் வாக்கிலிருந்து உண்டாகும் பாஷை; அது போலவே விலங்கினங்களின் பாஷை இருக்கிறது என்று சொல்லலாம் .
மனிதனுடைய பாஷையோ அவனது உள்ளக் கருத்தைத் தெளிவாகச் சொல்லும் கருவியாக இருக்கிறது.பல மனிதர்கள் தமக்குள்ளே அமைத்துக் கொண்ட வரையறைக்குள் அடைங்கி ஒரு பொதுமைப் பண்பைப்  பெற்றுருக்கிறது. தேசத்தின்  வட கோடியில்  உள்ள குழந்தை கல்லைக் கல்லென்கிறது. தென் கோடியில் உள்ள கிழவனும் அதைக் கல்லென்றே சொல்கிறான் .இது இயற்கையகவே அமைந்த நியதியைப் போலத் தோன்றும் கட்டுப்பாடு. இதனால்தான் பாஷையின் உபயோகம் அதிகமாகிறது.இந்தப் பொதுக் கட்டுப்பாடு  இல்லாவிட்டால் , வீட்டுக்கு ஒரு பாஷையாக , குடும்பத்துக்கு ஒரு பாஷையாக பாஷைகள் முளைத்திருக்கும் . பலருக்குப் பயன்படாமையால்  அவை சில காலம் இருந்து மறைந்து போயிருக்கும் .
இன்ன பொருளை இன்ன ஒலியினால் குறிப்பது என்ற   வரையறையை உணர்ந்து, அப்படியே ஒருவரைப் போலவே பிறரும் வழங்கி வந்ததனால் தான் பாஷையானது பல இடங்களுக்குப் பரவிப் பல காலமாக நிலவி வருகிறது. ஓர் இன மக்கள் தம்முடைய முயற்சியினால் உலகத்தில் பல இடங்களுக்குச் சென்று வாழத் தொடங்கினால் அவ்வினத்தோருக்குரிய மொழி அதிகமாகப் பரவுகிறது. இன்று ஆங்கில மொழி உலகத்திலே பல இடங்களிலே பரவியிருப்பதற்குக் காரணம் , அந்த மொழியினிடம் மக்களுக்கு விருப்பம் அன்று; அதனைப் பேசும் இனத்தார் தம் முயற்சியைப் பல நாடுகளிலும்  பரப்பி ஊன்றிக் கொண்டதுதான் காரணம் .
            பாஷை முதலில் மனிதனின் அன்றாட வாழ்வுக்கு உபயோகப்படும் கருவியாகவே தோன்றியது. அற்றைக் கூலி பெற்று வாழும் தொழிலாளி ஒருவன் நாளடைவில் பணத்தைச் சேமித்து வைக்கிறான் .அது போலப் பாஷையில் தினந்தோறும் உபயோகப் படாத சேமிப்பு நிதி ஒன்று திரண்டது.ஓடி, ஆடி தொழிலும் வியாபாரமும் செய்து வாழும் வாழ்க்கையில் அவசியமாக இருக்கும் பாஷைக்குப் புறம்பே , பழமையையும் , புதுமையையும் நினைக்கவும் , சிந்திக்கவும் பயன்படும் ஒரு பகுதி தோன்றலாயிற்று.சிந்தனா லோகத்தில் அந்தப் பகுதி வளர்ந்தது. அதுதான் இலக்கியம் . மனிதன் தினந்தோறும் சோறும் , நீரும் உண்கிறான் . பாயசமும் , பட்சணமும் விழாக்களில் உண்ணுகிறான். அவ்வாறே பாஷையில் இலக்கியம் வந்தது. மனிதன் வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க நிழல் தேடியது ஆரம்பக் காலக் கதை. பிறகு அவன் மாட மாளிகை கூட கோபுரங்களைக் கட்டினான் .இலையாலும் தழையாலும் உடை உடுத்து மானத்தைக் காப்பாற்றியது போய் சித்திரத் தூசம் , செம்பொன்னாடையும் புனையலானான் . அவன் பேசிய தாய் மொழியிலும்  இப்படியே அவனது கருத்து வளம் பெறப் பெற இலக்கியங்கள் வளர்ந்தன.
            ஒரு பாஷையைப் பேசும் மனித சமுதாயத்தினர் நெடுக்காலமாக   வாழ்ந்தாலும் , உயர் நிலையில் வாழ்ந்தாலும்  அவர்களுடைய தாய் மொழியில் இலக்கியங்கள் பெருகும் . உயர் நிலையில் வாழும் மக்களால் பேசப் பெறாமையால் , இன்னும் இலக்கியம்  காட்டு மிராண்டிகளின் தாய்மையாக நிற்கும் மொழிகள் பல உலகத்தில் இருக்கின்றன. மனிதனது வாழ்க்கையில் அடிப்படையாக உள்ள உணர்ச்சிகளையும் செயல்களையும் குறிக்கும் வார்த்தைகளும் , வாக்கியங்களும் அந்த   மொழிகளில்   இருக்கலாம் . அம்மக்கள் கட்டிக் கொண்டு வாழும்  தழைக் குடில்களைப் போல , அவர்கள் உண்டு வாழும் ஊனையும் , பழங்களையும் போல, அந்த மொழிகள் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகிச் சுருக்கமாக உள்ளன. அவர்கள் ஊரில் மாட மாளிகைகள் இல்லை.அவர்கள் உண்ணும் உணவில் அல்வா இல்லை; அவர்கள் ஆடையில் சரிகை இல்லை; அவர்கள் பாஷையில் இலக்கிய வளம் இல்லை.
            பல காலம் நல் வாழ்வு வாழ்ந்த மக்களின் தாய் மொழியோ இலக்கிய வளம் பெற்று விளங்கும் .  தமிழ் மொழி பல காலும் வாழ்ந்து வரும் மனிதக் கூட்டத்தினரின் தாய் மொழி; மிக நன்றாய் வாழ்ந்த மக்களின் மொழி; ஆதலின் நிச்சயமாக இதில் இலக்கிய வளம் சிறந்து நிற்கத்தான் வேண்டும் . தமிழனது வாழ்வின் உன்னத நிலையை  அவன் கட்டிய கோபுரங்கள் காட்டுகின்றன. அவன் உண்ணும் அறுசுவை உண்டி புலப்படுத்துகிறது. அவன் பூணும் அணிவகை தெளிவாக்குகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக  அவன் பேசும் மொழியில்  உள்ள நிதிகளாகிய இலக்கியங்கள் காட்டுகின்றன.
            மனித இன ஆராய்ச்சியாளரில் சிலர் ஆதி மனிதன் தமிழ் நாட்டிலே தோன்றினான் என்று கூறுகின்றனர். ‘ தமிழனுடைய  அங்க அமைப்பு இன்று நேற்று உண்டானதல்ல, பல காலமாக ,பல ஆயிரம் ஆண்டுகளாக அவன் தலையும் மூக்கும் , வாயும் ,முகமும் பண்பட்டுப் பண்பட்டு இன்றைய நிலையை அடைந்திருக்கின்றன. ‘ என்பது அவர் கூறும்  செய்தி. உருவம் காலங்கண்ட பழமையைக் காட்டுவது உண்மையாக இருந்தால் , அவன் தாய் மொழியும்  அவனோடு நெடுங்காலங்கண்ட பழமையுடையதென்றே சொல்ல வேண்டும் .
இன்று உலகத்தில் உள்ள    மொழிகளுக்குள்ளே மிகப் பழமையான   மொழிகளுக்குள் தமிழ் ஒன்று என்பதை மொழி நூல் வல்லவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
தமிழர் தமக்குள்ளே வழங்கும் கதைகளிலிருந்து பழமையை ஒருவாறு ஊகிக்க முடியும் . சிவபிரான் தமிழை உண்டாக்கினார். என்று புராணம் சொல்கிறது அதனூடே உள்ள உண்மையை நாம் உணரவேண்டும் . சரித்திரத்தால் தொடப்படாத காலத்திலேயே, சிருஷ்டியோடு சேர்ந்து படைக்கப்பட்டதென்று தோன்றும்படியான  பழமையுடையதுதமிழ் என்பதைத் தான் இந்தக் கதை சொல்வதாகக் கொள்ள வேண்டும் . சைவர் சிவன் தந்ததாகச் சொன்னால்  பௌத்தர் அவலோகிதன் தந்ததாகக் கூறுவர். எல்லோரும் , தெய்வத்தால் , அமைக்கப்பட்டது இது  என்றே சொல்கிறார்கள். அந்தக் கதை  தமிழின் தெய்வத்தன்மையைக் குறிப்பதாகக் கொள்வதைவிட , அதன் பழமையைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தமாகும் .


தொண்டை கட்டு
* தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாத ஐயரிடம் கி.வா.ஜகந்நாதன் மாணவராக இருந்த நேரம்..  ஒருமுறை கி.வா.ஜ.வை ஒரு பாட்டுப் பாடு என்றார் உ.வே.சா. 

அப்போது கி.வா.ஜ.வுக்குத் தொண்டை கட்டியிருந்தது. கி.வா.ஜ. செய்த தமிழ்த் தொண்டைப் பாராட்டலாமே தவிர அவரது தொண்டை அன்று பாராட்டும்படியாக இருக்கவில்லை. 

'என் தொண்டை கம்மலாக இருக்கிறது. இன்று போய் என்னைப் பாடச் சொல்கிறீர்களே' என்று தயங்கினார் கி.வா.ஜ. 'அதனால் என்ன பரவாயில்லை. காதால் தானே கேட்கப் போகிறோம். கம்மல் காதுக்கு அழகுதான் பாடு' என்றார் உ.வே.சா!
தண்ணீருக்குக் கவலையில்லை
சேலத்தில் சாரதா கல்லூரி. கொஞ்சகாலம் முன்பு உயர்நிலைப் பள்ளியாக இருந்தது  அது. ஊருக்கு வெளியே பல ஏக்கரா புன்செய் நிலங்களுக்கு இடையே அந்தப் பள்ளிக் கட்டிடம்.

கி.வா.ஜகந்நாதன் பள்ளிக்கு வந்து பேச வேண்டும் என்பது நிர்வாகத்தார்  விருப்பம். அழைத்தார்கள். கி.வா.ஜ. வந்தார். பள்ளியைச் சுற்றிக் காட்டினார்கள்.  கிணற்றையும் காட்டினார்கள்.

'கவலை ஏற்றம் போட்டுத்தான் இதுவரை தண்ணீர் இறைத்து வந்தோம். ஆனால்இப்போது பம்ப் செட் போட்டுவிட்டோம். பம்ப் மூலமாகத் தண்ணீர் கொட்டுகிறது' என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட கி.வா.ஜ., ''அடடா! அப்படியானால் இனிமேல் தண்ணீருக்குக் கவலையே இல்லை என்று சொல்லுங்கள்'' என்றார்!