செவ்வாய், 9 ஏப்ரல், 2019


மனை விளக்கு – பகுதி 4
  கி.வா.ஜ
பழங்கதை அவனது உள்ளத்தே ஓடியது.” நெஞ்சே! அன்று நான் பாலை நிலத்தில் நடுவழியில் என் உரனெல்லாம் மாயும்படி வந்த மாலைக் காலத்தில் வினை முடித்தாலன்ன இனியோனாகிய காதலி மனைக்கு மாட்சிமை தரும் சுடரொடு நின்று படரும்பொழுது  இது என்று  நினைத்து மயங்கினேனே!  மறுபடியும் அந்த அவஸ்தைக்கு  ஆளாக வேண்டுமா? பட்ட பின்பும் துன்பத்தை வலிய மேற்கொள்வார் உண்டோ? நான் போக மாட்டேன்” என்று தன் நெஞ்சோடு அந்தத் தலைவன்  பேசுகிறான்.
ஈன்பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினைப்
பொரி அரை வேம்பின் பிள்ளி நீழல்
சுட்டனை அன்ன  வட்டரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர்  நெல்லிவட்டு ஆடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சிறூர்ச்
சுரன் முதல் வந்த உரன்மாய் மாலை
உள்ளினென்  அல்லனோ யானே,’ உள்ளிய
வினைமுடித்  தன்ன  இனியோள்
மனை மாண் சுடரொடு படர்பொழுது ‘ எனவே?
நெஞ்சே ,முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பருந்து இருந்து வருந்தும் , வானை முட்டும் நீண்ட கிளைகளையும் , பொரிந்த அடியையும் உடைய வேப்ப மரத்தின், புள்ளி வைத்தாற் போன்ற செறிவில்லாத நிழலிலே பொன்னை உரைக்கும் கல்லைப் போன்ற வட்டாடுதற்குரிய இடத்தை அமைத்து , கல்லாச் சிறுவர்கள் நெல்லிக்காயாகிய வட்டுகளை வைத்துக் கொண்டு விளையாடுவதும் வழிப்போவோரைக் கொலை செய்யும் வில்லையே  ஏரகக் கொண்டு முயற்சி செய்யும் ஆறலை கள்வர்  வாழ்கின்ற வெம்மையையுடைய  முன்னிடங்களைப் பெற்ற சிறிய ஊர்களை உடையதுமாகிய பாலை நில வழியில் வந்த என் மன வலிமையை அழியச் செய்கின்ற மாலைக்காலத்தில் , நான் நினைத்துக் கவலையுற்றேன் அல்லவா? ‘”நினைத்த காரியத்தை நிறைவேற்றினால் வரும் இனிமையைப் போன்ற இனிமையையுடைய நம் காதலி நம் மனைக்கு அழகான விளக்கோடு நின்று கவலையோடு நம்மை நினைக்கும்பொழுது இது என்று?
மாலையில், எனவே , யான் உன்னினென் அல்லனோ? “ என்று வாக்கியத்தை முடித்துக் கொள்க.
ஈனுதல்—கருவுயிர்த்தல், உயவும் –வருந்தும், சினை—கிளி, பொரி அரை –பொரிந்த அடி மரம், பொறுக்குத் தட்டிப்போன அடி மரம், புள்ளி நிழல்—புள்ளி புள்ளியாக இருக்கும் நிழல், கட்டளை—பொன்னைஉரைக்கும் கல், வட்டு அரங்கு—சூது காய்களை ஆடும் இடம் , குண்டுகளை ஆடும் இடம் , வில் ஏர் உழவர்—வில்லையே ஊராகவுடைய உழவராகிய பாலை நிலமறவர்,முனை—முன்னிடம், சீறூர்—சிறு ஊர், சுரன் முதல்—பாலை நில வழியிடத்தில் ; முதல் . ஏழாம் வேற்றுமை உருபு, உரன் --- வலிமை. இங்கே மனத்திண்மை, உள்ளினென்—நினைத்தேன் வினை முடித்தன்ன---காரியத்தை நிறைவேற்றினாற் போன்ற , மனை மாண்—மனைக்கு மாட்சி தருகின்ற , சுடர்—விளக்கு, படர்—நினைக்கும்
‘முன் ஒரு காலத்துப் பொருள் வயிற் பிரிந்த தலை மகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது’ என்பது இந்தப் பாடலின் துறை.முன்பு ஒருதடவை பொருள் ஈட்டுவதற்காகத் தன் காதலியைப் பிரிந்து சென்று மீண்ட தலை மகன் , மறுபடியும் பொருள் தேடவேண்டுமென்று எண்ணிய நெஞ்சுக்குச் சொன்னது’ என்பது அதற்குப் பொருள். மணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தும் கற்புக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி இது.
இதனைபாடியவர் இளங்கீரனார்.என்னும் புலவர் . இது நற்றிணையில் மூன்றாவது பாட்டு.


சனி, 6 ஏப்ரல், 2019


மனை விளக்கு – பகுதி 3
கி.வா.ஜ
இவ்வளவு கொடுமையுள பாலை நில வழி காதலனுடைய அகக் கண்ணிலே வந்து நின்றது.’ நாமா அந்த நிலையைக் கடந்து போனோம்!”என்று அவனே மலைத்தான். நினைத்தாலே நடுக்கம் தரும் இடம் அல்லவா அது? அந்த இடத்தின் வழியாக மறுபடியும் பொருள் ஈட்ட வேண்டுமென்று இந்த நெஞ்சம் நினைக்கிறதே!என்ன பைத்தியக்காரத் தனம்!
            சென்ற தடவை அவன் போனபோது அந்தப் பாலைவனத்தின் கொடுமையை நேரே கண்டிருக்கிறான்அதன் வழியில் செல்லும்போது உண்டான துன்பம் கிடக்கட்டும் , அப்போது அவன் உள்ளத்தே   எழுந்த ஒரு பெரிய போராட்டத்தை ஒருவாறு வென்று மேலே சென்றான்.அந்தச் செய்தியும் இப்போது அவனுக்கு நினைவுக்கு வருகிறது
            வில்லேர் உழவர் வாழும் வெவ்விய முன் இடங்களையுடைய சிறிய ஊர்கள் இடை இடையே இருக்கும் சுரத்தின் வழியே அவன் போய்க் கொண்டிருந்தான் .அங்கே வெயில் கடுமையாக அடிக்கும்போது தான் மிக மிகத் துன்பம் உண்டாகும்.ஆனால் இப்போது வெயில் தணிந்து கொண்டிருந்தது. மாலைக் காலம் வந்து விட்டது. அந்தச் சமயத்தில் தான் அவனுக்கு அதிகத் துயரம் உண்டாயிற்று.அவனுடைய நெஞ்சத்தின் உரமெல்லாம் எங்கேயோ போய் ஒளிந்து கொண்டது. அவன் அப்போது தன் மனையை நினைத்தான். மனைக்கு விளக்காகத் திகழும் காதலியை நினைத்தான். இந்தப் பாலை நிலத்தில் தன்னந்தனியே நாற்புறமும் ஜீவனற்ற காட்சிகளே நிறைந்த  இடத்தில் அவன் நிற்கிறான்.அவன் தன் வீட்டில் இருந்தானானால் இந்த நேரத்தில் அவன் காதலி மனைக்கு அழகைத் தருகிற விளக்கை ஏற்றி  அதை வணங்கி விட்டு அவன் முன் புன்னகை பூத்தபடி  வந்து நிற்பாளே! தலையை அழகாக வாரிப்பின்னி  மலரைச் சூடிக்கொண்டு நெற்றியில் திலகம் இட்டு  அந்த விளக்கைக் கையில் ஏந்திச் செல்லும் கோலம் இப்போது  நினைத்தாலும் உள்ளத்தைக் கிளரச் செய்கிறது.
இன்று அங்கே தன் இல்லத்தில் அவள் எப்படி இருப்பாள்? அதை உன்னிப் பார்த்தான் அந்தச் சுரத்திலே அவன் உரன் மாயும்படி வந்த மாலைக் காலத்திலே அவன் நினைத்துப் பார்த்தான். இப்போது அவள் மனைக்கு மாட்சி தரும்  திருவிளக்கை ஏற்றுவாள். ஆனால் தன் காதலன் அருகே இல்லாமையால் முகம் வாடி அப்படியே உட்கார்ந்து விடுவாள். அந்த விளக்கைப் பார்த்தபடியே “அவர் எங்கே இருக்கிறாரோ!’ என்ற சிந்தனையில் மூழ்கி இருப்பாள்.
            இந்த நேரத்தில் அவள் மனை மாண் சுடரை  ஏற்றி அதன் முன்னே அமர்ந்து தன் நெஞ்சிலே படரும் நினைப்பில் ஈடுபடிருப்பாள்’ என்று அவன் எண்ணினான்.அவன் அவளை நினைத்தான்.அவள் அவனை நினைப்பாள். இப்படித் துன்பம் அடைவதை விட பேசாமல்  ஊருக்கே திரும்பிப் போய்விடலாமா? என்று கூட அவன் நினைத்தான் .’சீ! சீ! முன் வைத்த காலை பின் வைக்கவாவது! உலகம் ஏசாதா? ஊரார் ஏச மாட்டார்களா? காதலியே ஏளனமாகப் பார்த்துச் சிரிக்க மாட்டாளா? இத்தனை தூரம் வந்து விட்டோம் . எப்படியாவது நினைத்த காரியத்தை முடித்துக் கொண்டு பணமும் கையுமாகத்தான் ஊருக்குப் போக வேண்டும் .’ என்று தீர்மானித்தான்.ஆயினும் அவன் மனை விளக்காகிய மனையில் விளக்குக்கு முன்னே நினைப்பில் ஆழ்ந்திருக்கும் கோலத்தை எளிதில் அவன் உள்ளத்திலிருந்து அகற்ற முடியவில்லை.மனம் சுழன்றது; சிதறியது.
            கடைசியில் ஆண்மை வென்றது. உறுதியுடன் பாலை நிலத்தைக் கடந்து சென்றான்.வேற்று நாட்டுக்குப் போய் பொருள் ஈட்டி வந்தான் .நினைத்த காரியத்தை நினைத்தபடி முடித்து வந்தான் .அதற்குரிய மனத் திண்மை அவனுக்கு இருந்தது.”எண்ணிய எண்ணியாங்கு  எய்துப எண்ணியார் , திண்ணியர் ஆகப் பெறின்”என்பதுதான் என்ன! அந்த மன நிறைவுக்கு ஒப்பு உண்டா? உண்டு. இப்போது அவனுடைய காதலி நினைத்த வினையை முடித்தால் வரும் இனிமையின் பிழம்பு போல இருக்கிறான். அவளை மீட்டும் பிரிந்து செல்வதா?


வெள்ளி, 5 ஏப்ரல், 2019


 மனை விளக்கு ---   பாக ம் 2
இப்போது அவனது உள்ளத்தில் சிறிது சபலம் தட்டியது.மறுபடியும் வெளிநாடு சென்று சிலகாலம் தங்கி ஏதேனும் தொழில் செய்து பணம் சம்பாதித்து வரலாமா என்ற எண்ணம் தோன்றியது.பணம் எவ்வளவு இருந்தால்தான் என்ன?செலவழிக்கவா வழி இல்லை? இன்னும் பணம் சேர்த்து வந்தால் . இன்னும் இன்பம் உண்டாவதற்கு ஏற்ற வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாமே என்ற விருப்பம் அவனுடைய நெஞ்சிடையே முளைத்தது. 
‘அடபாவி நெஞ்சே! உனக்கு இன்னுமா சபலம்? முன்னாலே பட்ட துன்பங்களெல்லாம் அதற்குள் நீ மறந்து போனாயே?  பொருளைச் சம்பாதிக்க மறுபடியும்  போகலாம் என்று எண்ணுகிறாயே ! போனதடவை படாத பாடு பட்டோம் ; அதை எண்ணிப்பார்.’ என்று அவன் நினைக்கிறான்.நெஞ்சுதான் நினைக்கிறது. ஆனாலும் அதை வேறாக வைத்துப் பேசுவது போல்  அந்த நினைப்பு ஓடுகிறது.
“ நாம் போனோமே, அந்த வழி அழகிய சாலையும் , சோலையுமாகவா இருந்தது? பூங்காவும் அடர்ந்த மரமும் நிழல்தர , போகும் இடங்களிலெல்லாம் மக்கள் உபசாரம் செய்ய , அழகிய காட்சிகளைக் கண்டு களித்துச் சென்றாலும் குற்றம் இல்லை.அந்தக் கண்ணாறாவிக் காட்சியை என்னென்று சொல்வது?
அவன் இப்போது இருந்த இன்பச் சூழலிலே அன்று அப்போது பட்ட பாட்டை நினைவுக்குக் கொண்டுவருகிறான்.
போன வழியெல்லாம் மரம் கருகிவளம் சுருங்கிய பாலை நிலம் அது.எங்கேயோ ஒரு மூலையில் வேப்பமரம் ஒன்று.வேறு எங்கோ ஓர் இடத்தில் நெல்லி மரம் ஒன்று.  பார்த்தாலே  கண் எரிச்சலை உண்டாக்கும்  அந்தச் சுரத்தில் நிற்கும் அந்த வேப்ப மரமாவது தழை அடர்ந்து வளர்ந்திருக்கிறதா?என்றைக்கோ தண்ணீரைக் கண்ட அது ஏதோ புண்ணியத்துக்கு உயிரை வைத்துக் கொண்டிருக்கிறது.இலையே தெரியாமல் கிளை தெரிவதனால் அது நீளமாகத் தோன்றுகிறது.வளம் இல்லாமல் சதைப் பிடிப்பின்றிக் குச்சி குச்சியாக இருக்கும் கையும் , காலும் உடம்பும் நீளமாகத் தோன்றுவது இல்லையா? வானத்திலே அந்தக் கிளைகள் நிமிர்ந்து நிற்கின்றன.பரந்து படர்ந்து தழைத்து நிழல் தர அங்கே நீர் வளந்தான் இல்லையே! மேலெல்லாம் ஆகாசம். அதை முட்டுவது போல நிற்கிற  வான் பொர நெடுஞ்சினைகளை உடையது அந்த வேப்ப மரம்.
அதன் அடிமரம் எப்படி இருக்கிறது?பொறுக்குத் தட்டின புண்ணைப்போலே  பொரிந்து போய்க் கிடக்கிறது,.பொரிந்த அரையுடைய அந்த மரத்தின் வான் பொரு நெடுஞ் சினையின் மேல் ஒரு பறவை இருக்கிறது.அது குயிலும் அல்ல;கிளியும் அல்ல . குயிலுக்கும் கிளிக்கும் அங்கே பழமும் தளிரும் ஏது?பருந்தும் கழுகுமே அந்தப் பாலைவனத்தின் பறவைகள். வழிப்பறி செ ய்யும் கள்வர்கள்  பிரயாணிகளை மடக்கிக் கொலை செய்வதும் உண்டு.அந்தப் பிணங்களைக் கொத்தி விருந்துண்ணும் பெருமையுடைய பறவைகளே  அந்த நிலத்தில் வாழ முடியும் . பருந்தும் கழுகும் பிணம் தின்னும் ஜாதியல்லவா?
பாலை நிலத்துப் பிரஜையாகிய பருந்து ஒன்று வேப்ப மரத்தின் மேல் இருக்கிறது. அதற்கு அங்கே என்ன வேலை? அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க வந்திருக்கிறது ப்ரசவ வேதனையோடு அந்த மரத்துக் கிளையில் தங்கியிருக்கிறது.அந்த வேம்பின் மேலே  ஈனும் பருந்து வருந்தி உறையும் காட்சியைத்தான் காணலாம் .பிணம் தின்னும் பரம்பரை வளர இடம் கொடுக்கிறது. அந்த வேப்ப மரம்!
வேப்ப மரத்தின் கீழே என்ன இருக்கிறது? அடர்ந்து செறிந்திருந்தால் நல்ல நிழல் இருக்கும் .இந்த மரத்திலோ பேருக்கு இலைகள் இருக்கின்றனவே ஒழிய அவை தள தளவென்று தழைத்திருக்கவில்லை. அந்த இலைகளும் உருவம் சுருங்கிய சிறிய சிறிய இலைகள்.மரத்தின் கீழே நிழல் படர்ந்தா இருக்கும்?புள்ளி புள்ளியாக நிழல் இருக்கிறது பொரித்த அரையும் வானைப்பொரும் நெஞ்சினையும் ஈனும் பருத்து உயவும் ( வருந்தும்) நிலையும் உடைய அந்தப் பாலை நில வேப்ப மரத்தின் கீழே புள்ளி நிழல்தான் இருக்கிறது.
            அட! அந்த நிழலுக்குக் கூட வெறித்துப் போனவர்கள் அங்கே இருக்கிறார்களே! எங்கே பார்த்தாலும் பதை பதைக்கும் வெயில்  காயும்போது அது புள்ளி நிழ்லாக இருந்தால் என்ன ? நிழல் என்பதே அரிய பொருளாக இருக்கும் அந்தப் பிரதேசத்தில் எவ்வளவு குறைவாக இருந்தாலும் நிழல் நிழல்தானே?
            வேப்ப மரத்தின் கீழே புள்ளியிட்டாற்போன்ற நிழலில் குழந்தைகள் விளையாடுகிறார்கள்.பாலை நிலத்திலும் மக்கள் இருக்கிறார்கள்.அவர்களுடைய குழந்தைகள் அவர்கள். பாலை நிலமாயிற்றே, நீர் வளம், நிலவளம் இல்லாத அந்த இடத்தில் என்ன விளையும் ? எதைப் பயிர் செய்ய முடியும் ? அங்கே உள்ள மனிதர்கள் எப்படிப் பிழைக்கிறார்கள்?
அவர்களும் உழவுத் தொழில் செய்பவர்களே; நிலத்தை ஏரால் உழுபவர்கள் அல்ல. வில்லும் அம்பும்  கொண்டு , வழிப்போகும் மக்களைக் கொன்று அவர்களிடம் உள்ள பொருளைப் பறித்து அதைக் கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் தங்கள் வில்லையே ஏராகக் கொண்டு வழிப்பறியாகிய விவசாயத்தைச் செய்கிறவர்கள்.வில்லேருழவர் கொலைத் தொழிலும் கொள்ளையிடுவதுமே அவர்களுடைய உத்தியோகம் .அவர்களுக்கும் குழந்தை குட்டிகள் உண்டு.அவர்களுடைய குழந்தைகள் வேப்ப மரத்தடியில் விளியயாடுகிறார்கள்.அவர்களுக்குப் படிப்போ நல்ல பழக்கங்களோ இல்லை.கல்லாச் சிறார். அவர்கள் வட்டு ஆடுகிறார்கள்.தாயக்கட்டம் ஆடுவது போன்ற ஒரு விளையாட்டைஆடுகிறார்கள்.பாலைவனத்தில் எங்கோ தனியே வளர்ந்திருக்கும் நெல்லிக்காயைப் பொறுக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.அதையே உருட்டி உருட்டி விளையாடுகிறார்கள்.அவர் கோடு கிழித்த இடம் பொன்னை உரைக்கும் கல்லைப் போலக் கறுப்பாகக் கரடு முரடாக இருக்கிறது.வில்லேர் உழவர்களுடைய கல்லாச் சிறார் வட்டு ஆடும் அரங்காக அந்த மரத்தின் அடி இருக்கிறது.
இடம் நினைத்தாலே அச்சம் தருவதாக இல்லையா? ஒரு பொருளாவது உள்ளத்திலே குளிர்ச்சியை, அழகைத் தருவதாக இருக்கக் கூடாதா? கைப்புக்கு இடமான வேம்பு ; அது கூட இலை சிறுத்து அடிமரம் பொரிந்து நிற்கிறது.அதன் மேலே பிணத்தை விருந்தாக அருந்தும் பருந்து. கீழே வில்லேருழவரின் கல்லாச் சிறார்.
            வழிப்பறி செய்கின்ற வில்லேழுவர்கள் சேர்ந்து வாழும் சின்னச் சின்ன ஊர்கள் வழி முழுவதும்  இருக்கின்றன. வெப்பம் நிறைந்த முற்றங்களையுடைய ஊர்கள்.அவை புறத்திலே மாத்திரம் வெப்பம் அல்ல. உள்ளத்தே கூட வெப்பம் கொண்ட மக்கள் வாழும் இடங்கள் அவை.சுடுகாட்டுக்கும் அவற்றிற்கும் வேறுபாடு இல்லை.
( தொடரும்)


புதன், 3 ஏப்ரல், 2019


 மனை விளக்கு
கி.வா ஜகந்நாதன்
இல்லற வாழ்வில் ஈடுபட்டு இன்பங்காணும் அந்தக் கட்டிளங்காளைக்கு  எதனாலும் குறைவில்லை.அழகுப் பிழம்பாகத் திகழும் காதலியைப் பெற்ற பின் அவனுடைய  இன்பத்துக்கு வேறு என்ன வேண்டும் ? உலகம் அறிய அவளை மனைவியக ஏற்றுக் கொண்டான்.அழகிய இல்லத்தில் அவளோடு வாழப் புகுந்தான். அறத்தை வளர்த்து இன்பக் கடலில் துளைந்தாடும் வாழ்விலே அவன் ஈடுபட்டான்.தம் முன்னோர்  ஈட்டு வைத்த பொருள் இருந்தாலும் தம் முயற்சியினாலே  பொருளைச் சம்பாதித்து அறம் புரிவதுதான் சிறப்பு என்பது தமிழர் கொள்கை.ஆகவே, அவன் அறமும்  இன்பமும் நெடுங்காலம் இடையூறின்றி விளையும்  பொருட்டுப் பொருள் ஈட்டி வர எண்ணினான்.அற்ம் பொருள் இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருள்களிலும் நடுநாயகமாக நிற்கும் பொருள் இருந்தால் அறம் செய்யலாம் . இன்பமும் துய்க்கலாம். இல்லையெனில் பிறருக்கு ஈயவும் இயலாது ; தாமே இன்பம் துய்க்கவும் முடியாது. இவற்றையெல்லாம் அவன் நன்கு உணர்ந்தான்.
வேற்று நாட்டுக்குச் சென்றால் நிறைய பொருள் ஈட்ட முடியும் என்று  நம்பிக்கை அவனுக்கு இருந்தது. திரை கடல் ஓடியும் திரவியம் தேடும் உறுதிப்பாடும் உண்டு, ஆனால் ஒரே  ஓர் எண்ணம்  இந்த முயற்சிக்குத் தடையாக நின்றது.; அதுதான் பிரிவு.
            அவனும் அவன் காதலியும் அன்றிற் பறவைகளைப் போலப் பிரிவில்லாமல் இணைந்து வாழ்கிறவர்கள். மலரும் மணமும் போல ஒருவரோடு ஒருவர் உள்ளம் ஒன்றி இசைந்து இன்ப வாழ்வு காண்கின்றவர்கள். இப்போது அவன் அவளைப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும் . பொருள் ஈட்டச் செல்லும் இடத்திற்கு அவளையும் அழைத்துச் செல்வது இயலாத காரியம். பிரிந்துதான் போக வே ண்டும் . போகாமல் இருந்துவிடலாமென்றால்  , பொருள் இல்லாமல் இல்லற வாழ்க்கையில் ஒன்றும் செய்ய இயலாதே!
            பிரிந்து செல்லத்தான் வேண்டும் . எவ்வளவு விரைவிலே பொருளை சம்பாதித்துக் கொண்டு வரலாமோ அவ்வளவு விரைவிலே வந்துவிட வேண்டும் .என்றுதான் அவன் நினைத்தான் .இன்றியமையாத அளவுக்குப் பொருள் ஈட்டினால் போதுமே! கோடி கோடியாகக் குவித்துவிட வேண்டுமென்ற  ஆசை அவனுக்கு இல்லை.ஆதலின் சிறிது காலமே  அவனைப் பிரிந்திருக்க நேரும்.
            ஆனாலும் அந்தச் சிறிது காலம் கூடப் பிரிந்திருக்க முடியாதே! அவன் ஆடவன் ; மனத் திண்மை படைத்தவன். பொருளீட்டும் முயற்சியில் ஈடுபடுவதால் பிரிவுத் துன்பத்தை அவன் ஓரளவு மறந்திருக்கலாம் . அவனுடைய காதலி பிரிவைச் சகிப்பாளா?  ஒவ்வொரு கணமும் அவனைக் காணாமையாலே புழுவைப்போலத் துடிக்க மாட்டாளா?
பொருளோ இன்றியமையாதது. அதைச் சம்பாதிக்கக் காதலியைப் பிரிந்துதான் செல்ல வேண்டும் .பிரிவுத் துன்பமோ பொறுத்தற்கு அரியது. இந்த இசை கேடான நிலைமையில் என்ன செய்வது?
எப்படியோ   ஒருவாறு அவளுக்குத் தன் காதல் புலப்படும்படிக் கொஞ்சினான்.ஆறுதல் கூறினான்.தான் போக வேண்டியதின் அவசியத்தை உணர்த்தினான் .  புறப்பட்டுவிட்டான்.போய்ப் பொருள் தேடினான்.சம்பாதித்தான் , மறுபடியும்  ஊர் வந்து சேர்ந்தான் .அவளோடு இப்போது சேர்ந்து அநுபவிக்கும் இன்பம் முன்னைக் காட்டிலும் மிகுதியாக இருக்கிறது.நினைத்த காரியத்தை நினைத்த வண்ணம் நிறைவேற்றி வெற்றி கண்டு விட்டால் எத்தனை ஆனந்தம் இருக்கும் ! அவ்வளவு ஆனந்தம் வினையை முடித்தாற் போன்ற இனிமையைத்   தருபவள் அவள். செய்வினை முடித்தன்ன இனியோள். செய்வினையை  முடித்துப் பயன் பெற்றவன் அல்லவா அவன்?ஆகவே அந்த இன்பத்தையும்  இந்த இன்பத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்பு அவனிடம் அமைந்தது.   ( தொடரும்)


வியாழன், 14 மார்ச், 2019


கதிர்காமக் காட்சிகள் –திருவிழாக் காட்சிகள்  ---கி.வா.ஜகன்னாதன்
கதிர்காமத் திருக் கோயிலில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெளிவாகத் தெரியாது. ஒரு காலத்தில் இந்தக் கோயிலை  பூசிக்கும் தொண்டை ஹிந்துக்களே செய்து வந்ததாகச் சிலர் கூறுகிறார்கள். சிதம்பர ரஹசியம் போலக் கதிர்காம ரகசியமும் இருக்கிறது.                   
   உள்ளே மிக உயர்ந்த மாணிக்கத்தினாலாகிய முருகன் திருவுருவம் இருக்கிறதென்று சிலர் கூறுகின்றனர். தக்ஷிண கைலாச புராணம் என்னும் நூல் இந்தத் தலத்தைப் பற்றி வருணிக்கும் போது, இந்திர  நீல மணியினால் செய்த சிங்காதனத்தில் முருகன் எழுந்தருளியிருக்கிறான் என்று தெரிவிக்கிறது. அருணகிரினாதர் திருப்புகழில்                                       “கனக மாணிக்க வடிவனே  மிக்க                                                        கதிர காமத்தில் உறைவோனே “   என்று பாடுகிறார்                                  
   இவற்றை யெல்லாம் பார்க்கும் போது இங்கே மிக விலை உயர்ந்த பொருளால் ஆகிய முருகனுடைய திருவுருவம் இருந்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது தமிழ் நாட்டில் பல  பழைய தலங்களில் இன்னும்விலையுயர்ந்த மணிகளால் ஆகிய லிங்கங்களையும் ஆபரணங்களையும் காணலாம். அவ்வண்ணமே இங்கும் முருகனுடைய திருவுருவம் மிக்க விலையுயர்ந்த மாணிக்கத்தால் அமைந்திருக்க நியாயம் உண்டு.
  மாணிக்க வேல் இருக்கிறது என்றும் அதனையே பெட்டியில் வைத்திருக்கிறார்கள் என்றும் ,யந்திரம்  இருக்கிறதென்றும் அந்த யந்திரத்தகடே பெட்டியில் இருக்கிறதென்றும், அதனுடைய சக்தியால் தான் இத்தலத்துக்கு மகிமை ஏற்பட்டிருக்கிறதென்றும் கூறுபவர்கள் உண்டு.
  காட்டுக்கு நடுவே இத்தலம் இருந்தலினால் பக்தி உள்ளவர்கள் கூட்டம் கூட்டமாகவே வந்து தரிசித்துப் போயினர். மற்றச் சமயத்தினர்கள் இங்கே விலயுயர்ந்த பொருட்கள் இருக்கிறதென்றெண்ணி அதைக்  கொள்ளையடித்து எடுத்துச் செல்லவும் துணிந்தார்களாம். சில போர்த்துக்கீசியர்கள் இந்தக் கோயிலுக்குக் கொள்ளையடிப்பதற்காக வந்த போது , அவர்களுக்கு வழிகாட்டி வந்தவர்களூக்குப் அபித்தியம் பிடித்துவிட்டதாம். இதை ஒரு போர்த்துகீசியரே எழுதியிருக்கிறார்.
  காட்டுக் கிராமம் “ என்ற நாவலை லியனார்ட் வுல்ஃப் என்றவர் எழுதியிருக்கிறார்.  இலங்கையில் காட்டினிடையே  வாழ்ந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை அது. அதனிடையே அந்தக் குடும்பத்தினர் கதிர்காமத்துக்கு யாத்திரை சென்றதாக  ஒரு பகுதி வருகிறது. கதிர்காமத்தைப் பற்றித் தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் இணைத்து அந்தப் பகுதியை ஆசிரியர் எழுதியிருக்க வேண்டுமென்று தோற்றுகிறது. அந்தப் பகுதியில்சில இடங்கள் வருமாறு.  -------
   “ அடுத்த நாள் காலையில் அவர்கள் மகா பட்டணத்தை விட்டுச் செல்லவேண்டியிருந்தது.  மறுபடியும் காட்டினிடையே பிரயாணம் செய்து துன்புற நேர்ந்தது. இரண்டு  நாட்கள் முள் நிறைந்த காட்டினூடே நடக்க வேண்டியிருந்தது. , இடையில் வெயிலுக்கு ஒதுங்க நிழலே கிடையாது. வரவர வழி கல்லும் பாறையும் நிறைந்ததாக இருந்தது.அங்கங்கே புதர்களும் அவற்றினிடையே குண்டுக் கற்களும் இருந்தன. மரங்களுக்கிடையே உயர்ந்து நின்ற பாறைகளும் இருந்தன. முதல் நாள் பிற்பகலில் பேரகமக் குன்றத்தை நெடுந்தூரத்திலிருந்து கண்டார்கள். கோயிலுக்கு மேலே மூன்று சிகரங்களை  உடையதாக அது நின்றது அடுத்த நாள் மாலை அவர்கள் க்குன்ரத்தைச் சார்ந்த நாட்டை அடைந்தார்கள் அது அடிவாரத்திலிருந்து குன்றின் உச்சி வரையில் படர்ந்திருந்தது.
 “ மறுபடியும் திடீரென்று காடில்லாத இடம் வந்தது. ஓர் ஆற்றின் கரையை அடைந்தார்கள் கரைகளில் பெரிய மருத மரங்களும்அடர்ந்திருந்தன. வெயி காலமாகையால் ஆற்றின் நடுவில் கொஞ்சந்தான் நீர் ஓடிக் கொண்டிருந்தது . இரு பக்கங்களிலும் மணற் பரப்பு இருந்தது. ஆற்றில் அங்கங்கே யாத்திரிகர்கள் தங்கள் உடலழுக்கையும் உள்ளத்தழுக்கையும் போக்கிக் கொள்ள நீராடிக் கொண்டிருந்தார்கள். இவர்களும் அவர்களைப் பார்த்து நீராடினார்கள். வெள்ளாடை உடுத்துக் கொண்டு ஆற்றுக்கு அக்கரையை அடைந்து ஊருக்குள் போனார்கள்.
 ‘ நீளமும் அகலமுமான ஒரு தெருவில் அவர்கள் புகுந்தார்கள். தெருவின் இரு புறங்களிலும் வீடுகளூம் மடங்களும் இருந்தன. மடங்கள் யாத்திரிகர்கள் வந்து தங்க வசதியானவை. தெரு முழுவதும் அடியார்கள் நிறைந்திருந்தனர். சிலர் சும்மா நின்று கொண்டும், சிலர் கடைகளில் பண்டம் வாங்கிக்கொண்டும் , சிலர் கோயிலுக்குப் போய்க் கொண்டும் இருந்தார்கள். கோயிலிலிருந்து ஸ்வாமி வெளீயில் எழுந்தருள வேண்டிய சமயம் அது. அங்கே திருவிழா பதினான்கு தினங்கள் நடக்கும். ஒவ்வொரு நாளும் கடவுள் திரு வீதியில் எழுந்தருளுவார். பௌர்ணமியன்று உற்சவத்தின் கடைசி நாள். அன்று மிகவும் விசேஷமாக இறைவன் பவனி நடைபெறும். அதற்கு மறுநாள் கோயில்பூஜை செய்யும் கப்புராளை ஆற்றுக்குச் சென்று நீராடுவார். அப்போது அடியார்களெல்லாம் அவருடன் சென்று ஸ்னானம் செய்வார்கள். ஆற்றில் பொற் கத்தியினால் நீரைக் கீறுவார் பூசாரி.
  தெருவின் இரு முனையிலும் கோயில்கள் இருந்தன. வட முனையில் இருந்த கோயில் பேரகமத்தெய்யோ ( கதிர்காம முருகன் ) வினுடையது. தேவாலயம் சிறியது. அதன் ஒரு பக்கத்தில் விமானம் இருந்தது. அதன் மேல் பல தெய்வங்களின் திருவுருவங்கள் அமைந்திருந்தன. இந்துக் கோயில்களில் இப்படிக் கோபுரமும் அதில் சிற்ப உருவங்களும் இருக்கும். கோயிலைச் சுற்றிப் பெரிய முற்றம் இருந்தது.அதைச் சூழச் செங்கல்லால் அமைந்த திருமதில் இருந்தது. மதிலுக்குப் புறம்பே கீழ்த் திசையில் மற்றொரு சிறிய கோயில் இருந்தது. அது கடவுள் திருமணம் செய்து கொண்ட தேவியின் கோயில் . ( தேவயானை கோயில்) வீதியின் தென் கோடியில் மற்றொரு கோயில் உண்டு. அது சதுரமான கோயில் குப்பை கூளம் நிறைந்ததாக இருந்தது.அதற்கு முற்றமோ மதிலோ இல்லை.அதைச் சுற்றித் திண்ணை இருந்தது. அதில் கண்ட கண்ட சாமான்களெல்லாம் கிடந்தன. யாத்திரிகர்கள் அங்கே தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கோயிலுக்கு ஒரே ஒரு வாசல். அதில் ஒரு திரை கட்டியிருந்தார்கள். அந்தத் திரையில் கடவுள் திருவுருவம் இருந்தது. கப்புராளையரைத் தவிர வேறு யாரும் திரையைத் தாண்டி உள்ளே போக முடியாது. அந்தக் கோயில் கடவுளுடைய காதற்  கிழத்தியினுடையது. ( வள்ளீயம்மை திருக்கோயில் )
   “ இங்கே காட்டினிடையே வாழும் தமிழ்க் கடவுள் யார்?தமிழர்கள் இந்தப் பெரிய கடவுளைக் கந்தசாமி என்று வழங்கினார்கள். இங்கே வாழும் புத்தர்கள் அக்கடவுளை அறிந்து கொண்டவர்களாகச் சொல்கிறார்கள். மரங்களிலும் , காடுகளிலும் உள்ள பேய் பிசாசுகளை அவர்கள் அறிவார்கள். அவைகளோடு அந்தக் கடவுளும் இருக்கிறாரம். ஒரு காலத்தில் முன்னே சொன்ன பெரிய குன்றத்திலுள்ள மூன்று சிகரங்களில் நடுச் சிகரத்தில் இந்தக் கடவுள் எழுந்தருளி யிருந்தாராம். கடலளவும் பரந்து கிடக்கும் காட்டையும் , மலையையும் ஆட்சி புரிந்து வந்தார். அதனால் தான் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் அந்தச் சிகரத்தில் நெருப்புச் ஜோதி விடுகிறதாம். ஒருநாள் குன்றத்தின் மேல் அப்பெருமான் வீற்றிருந்து, கீழே ஓடிய ஆற்றையும், மரங்களையும் பார்த்தார். ஆற்றுக்கு அக்கரையில் உள்ள சம வெளீயில் சென்று தங்கவேண்டுமென்ற திருவுள்ளம் பூண்டார்.அந்தக் காலத்திலும் அவர் தமிழ்க் கடவுளாக இருந்தார். ஆகவே அந்தப் பக்கம் வந்த தமிழர்களை அழைத்து தம்மை ஆற்றின் அக்கரைக்கு எடுத்துச் செல்லும்படி பணித்தார். தமிழர்கள் “ எம்பெருமானே, நாங்களெல்லாம் ஏழைகள் நெடுந்தூரம் காடும் மேடும் கடந்து கடற்கரையில் உள்ள உப்பங்கழியில் உப்பெடுக்கப் போகிறோம். இப்போது இங்கே தங்கினால் மழை வந்து உப்பைக் கரைத்துவிடும். நாங்கள் வந்த காரியம் வீணாகிப் போகும்.ஆகையால் எங்கள் காரியத்தை முடித்துக் கொண்டு திரும்புகாலில் தேவரீரை எடுத்துச் சென்று ஆற்றுக்கு அக்கரையில் பிரதிஷ்டை செய்வோம்” என்றார்கள். இப்படிச் சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். அவர்கள் தம் ஏவலைப் புறக்கணித்ததனால் கடவுளுக்குக் கோபம்மூண்டது. சிறிது நேரம் கழித்து சிங்களவர்கள் சிலர் ஒரு கூட்டமாக வந்தார்கள். அவர்களும் உப்பங்கழியில் உப்பெடுக்கத்தான் போய்க் கொண்டிருந்தார்கள். கடவுள் அவர்களை அழைத்துத் தம்மை ஆற்றின் அக்கரைக்கு எடுத்துச் செல்லும்படி சொன்னார். அவர்கள் குன்றத்தின் மேல் ஏறிக் கடவுளை எடுத்துக் கொண்டு கீழிறங்கி ஆற்றைக் கடந்து சென்று அக்கரையில் மரங்களின் கீழ், இப்போது கோயில் உள்ள இடத்தில் வைத்தார்கள்.அப்போது கடவுள் இனிமேல் தம்மைத் தமிழர்கள் பூஜை செய்யக் கூடாதென்றும், சிங்களவர்களே செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டார். அதனால்தான் இந்தக் கடவுள் தமிழ்த் தெய்வமாக இருந்தாலும், கோயில் இந்துக்கோயிலாக இருந்தாலும் இங்குள்ள பூசகர்கள் பௌத்தர்களும் சிங்களவர்களுமாக இருக்கிறார்கள்.
  “ ஆகவே இந்தக் கடவுள் காட்டுத் தெய்வம். பெரிய பூத கண நாதர் , தக்க முறையில் அணுகி வழி பட்டால் அருள் செய்வார்.கோயிலைச் சுற்றியுள்ள அமானுஷ்யமான காடு முழுவதும் இவர் ஆணை பரந்திருக்கிறது. பக்தர்கள் இந்தக் கடவுளின் மேல் ஆணையிடுவார்கள். பொய்யாக ஆணையிட்டால் கடவுள் அவர்களைத் தண்டிப்பார். நோயாளிகளும் மலடிகளும் பேயால் பிடிக்கப் பட்டவர்களும் இங்கே பிரார்த்தனை செய்வார்கள்.
    
 
“ அடியார்கள் உற்சவ காலத்தில் கூட்டம் கூட்டமாக வந்து இந்தக் கடவுளை வழிபடுவார்கள். கடவுள் ஒரு மானைக் காதலித்துத் தம்  காதலியாகக்கொண்டார். தெருவின் தென் கோடியில் உள்ள கோயிலில் அந்தக் காதலியை இருக்கச் செய்தார். உற்சவத்தின் பதினாங்கு நாட்களிலும் ராத்திரியில் கப்புராளைகள் கோயிலுக்குச் சென்று ஒரு பெரிய கறுப்பு ஆடையால் கடவுளை மூடி எடுத்து வருவார்கள். அவரைப் பார்க்கக் கூடாது. யானையின் மேல் கடவுளை வைப்பார்கள். அடியார்கள் ஆண்டவர் பேர் சொல்லி அழைப்பார்கள். தங்கள் தலை மேல் கற்பூர தீபம் நிறைந்த பாத்திரங்களை ஏந்திச் செல்வார்கள். ஊர்வலம் வள்ளியம்மை திருக் கோயிலை நோக்கிச் செல்லும். அங்கே கப்புராளைகள் தங்கள் கண்களைக் கட்டிக் கொண்டு கடவுளை யானை மீதிருந்து இறக்கி, மறைத்த படியே வள்ளியம்மை கோயிலுக்குள் கொண்டு போவார்கள். அடியார்கள் இறைவர் திருநாம கோஷம் செய்வார்கள். பெண்கள் கப்புராளைமாரின் காலில் விழுந்து வணங்குவார்கள். இப்படிச் செய்தால் பிள்ளை யில்லாதவர்களூக்குக் குழந்தை பிறக்குமென்று நம்பினார்கள். கப்புராளைமார் கடவுளை வள்ளீயினிடம் எடுத்துச் சென்று வத்துவிட்டுப் போவார்கள். முரசுகள் முழங்கவும், மணிகள் ஒலிக்கவும் எங்கும் விளக்குகளின் சுடர்கள் ஒளிரவும் அடியார்கள் பாடி ஆடிக் களிப்பார்கள். கீழே விழுந்து வணங்குவார்கள். மறுபடியும் கப்புராளைமார் கண்ணைக் கட்டிக் கொண்டு வள்ளியம்மை கோயியிலுக்குள்ளே சென்று , கடவுளை மூடிய படியே எடுத்து வந்து யானையின்  மேல் வைப்பார்கள். மறுபடியும் தம்முடைய கோயிலை நோக்கிக் கடவுள் எழுந்தருளுவார். அடியார்கள் பின் தொடருவார்கள். “
  இவ்வாறு அந்த ஆங்கிலேயர்கள் கதிர் காமத்தில் நடைபெறும் திருவிழாவை வருணித்திருக்கிறார்.
   பல காலமாகவே கதிர்காமம் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது என்பதும் , மக்கள் இங்கே வந்து வழிபட்டுத் தம் குறை தீர்ந்தார்கள் என்பதும் இந்த வருணையினால் உணர வேண்டிய செய்தியாகும்.
   மாணிக்கத் திருவுருவ முடையவன் இங்கே எழுந்தருளிய முருகன் என்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், ஒரு காலத்தில் யாவரும் கண்டு வழிபடும் அற்புதத் திருவுருவம் ஒன்றை உடையவனாகி  முருகன் இங்கே எழுந்தருளியிருந்தான் என்று நம்ப இடமுண்டு.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------