குண்டோதரனுக்கு அன்னமிட்டது (
கி.வா.ஜ )
அங்கயற்கண்ணி யம்மையின் திருமணத்திற்கு வந்தவர்களுக்கெல்லாம் அறுசுவை
உண்டி வழங்கினர் . யாவரும் வயிறார உண்டு
மகிழ்ந்தனர். அப்போது
சமயர்காரர்கள் மீனாட்சியிடம் வந்து , “அன்னையே நாங்கள்
சமைத்த விருந்துணவில் ஆயிரத்தில் ஒரு
பகுதிகூடச் செலவாகவில்லையே ? இன்னும்
மலை மலையாக எல்லாம்
மிஞ்சியிருக்கின்றன. ” என்று
கூறினார்கள்.
அதைக் கேட்ட
அன்னை தன் கணவரை
அடைந்து பணிந்து ஒதுங்கி நின்று
மெல்லக் கூறலானாள். “ சுவமி !, தேவரீர் முப்பத்து
முக்கோடி கணங்களுடனும்
எழுந்தருள்வீர்கள் என்ற எண்ணத்தால்
விருந்து சமைத்திருக்கிறார்கள்.
திருமணத்துக்கு வந்தவர்கள் யாவரும்
உண்ட பிறகும் இமய மலையைப்
போலச் சோறும் , மற்ற
மலைகளைப்
போல ஏனைய உணவு
வகைகளும் மிஞ்சி இருக்கின்றன. ” என்றார்,
எம்பெருமான் சிறிதே
புன்னகை பூத்தான் . பிறகு , “ முடியுடை
மூவேந்தர்களினும் சிறந்த பாண்டியனுடைய மகளாகிய
உனக்குக் கிடைப்பதற்கு அரிய
பொருள் என்ன இருக்கிறது ? தேவலோகத்துக் கற்பகமும்
உன்னுடைய ஏவலுக்கு அடங்கி
இங்கே இருக்கிறது . நின் செல்வச்
சிறப்பை நாம் அறியும் பொருட்டு இவ்வளவு மிகுதியான
உணவைச் சமைக்கச் செய்தனை
போலும் !. இன்னும் உண்ணுவதற்கு
உரிய பசியுடையவராக யாரும்
என்னுடன் வந்த கணங்களில்
இல்லை . இதற்கு என்ன செய்வது ? ”
என்றான் .
இப்படிச் சொன்னவன்
அருகில் தனக்குக் குடை
பிடித்துக் கொண்டிருந்த பூத கணத்தைச்
சேர்ந்தவனாகிய குண்டோதரன் வயிற்றில்
பெருந்தீயைப் புகச் செய்தான் . அதனால் மிகவும்
வருந்திய அவன் , “ ஐயனே எனக்குப்
பசிக்கிறது . ” என்று சொன்னான் .
இறைவன் உடனே
மீனாட்சியைப் பார்த்து , “ இவனுக்குப்
பசிக்கிறதாம் , இவனுக்கு
ஒருபிடி சோறு போடுங்கள். பிறகு செய்வதை
அப்பால் சொல்கிறோம்” என்று
சொல்ல ,பிராட்டி குண்டோதரனை
அழைத்துக் கொண்டு செல்லும்படி
ஏவலரைப்
பணித்தாள். அவன் கடும்
பசியுடன் நடை தளர்ந்து , கண் புகைந்து
வாய் புலர அவர்களுடன் சென்றான். ஏவலாளர்கள் அவனைக்
கொண்டு போய்ச் சோற்று மலையின்
முன் விட்டார்கள். அங்கே அவன்
உட்கார்ந்ததுதான் , அடுத்த
கணத்தில் அங்கே இருந்த
அவ்வளவு பெரிய அன்னக்
குவியலும் இருந்த இடம்
தெரியாமல் போய்விட்டது.
இதைக் கண்டு யாவரும்
ஆச்சரியப்பட்டுப் போயினர்.
மகளிர் அஞ்சி ஓடினர். குண்டோதரன் சோற்றை
உண்டதோடு அங்குள்ள கறி,
கூட்டு , வறுவல் , குழம்பு
எல்லாவற்றையும்
அப்படியப்படியே எடுத்து வாயில்
கவிழ்த்துக் கொண்டான். பால், தயிர்
, நெய் முதலியவற்றையும் எடுத்து
விழுங்கினான் . அப்பொழுதும் அவன்
பசி தீரவில்லை . அங்கே குவித்திருந்த பலவகையான பழங்களை வாரி
உண்டான் . கரும்பை விழுங்கினான்
. பச்சைக் காய் கறிகளை
எடுத்து உண்டான் . அரிசியையும் வாய்
மடுத்து உண்டான் . இப்படி
அங்குள்ள பண்டங்கள் யாவற்றையும்
எடுத்து எடுத்து
வயிற்றுக்குள் பெய்தும் அவனுடைய பசி
அடங்கவில்லை . நெய்யை ஆகுதி செய்ய வேள்வித் தீ ஓங்குவது
போலப் பசி பின்னும் மிகுதியாயிற்று.
இதைக் கண்டு
அதிசயமுற்ற எம்பெருமாட்டி , தன்
கணவன் முன் சென்று
நாணத்துடன் தலை கவிழ்ந்து
நின்றாள். அவளைக் கண்ட
பெருமான் ஒன்றும் அறியாதவனைப்
போல் , “ அவன் உண்டு
இன்னும் உணவு மிஞ்சி இருந்தால் , இன்னும் உள்ள பூதங்களை
அனுப்புகிறேன் . ” என்றான்
அம்மை , “
சுவாமி, இந்தக் குட்டை
பூதம் அங்கே இருந்த
உணவு முழுவதையும் உண்டும்
அதன் பசி அடங்கின
பாடில்லை. இன்னும் மற்றக் கணங்களையும் விடுவீர்களானால் இந்த
உலகம் முழுதும் விழுங்கி
விடுவார்கள். ” என்று சொல்லிக்
கொண்டிருக்கும்போது குண்டோதரன்
அங்கே வந்தான் . “ எம்பெருமானே ,
எம்பிராட்டி சமைத்து வைத்த
உணவையெல்லாம் உண்டும் இன்னும் என்
பசி தீரவில்லையே !. பிறருக்கு இட்டு
உண்ணாதவர் வயிறு போல
என் வயிறு எரிகிறதே !.
தேவரீர் திரிபுரங்களுக்கு இட்ட
தீயே என் வயிற்றுக்குள் புகுந்ததோ
என்னவோ தெரியவில்லையே ?
” என்று கதறினான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக